சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் இளைஞர் பலி!

 
dead

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நேற்று நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டி பூங்குன்றநாயகி அம்மன் கோவில், சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதனையொட்டி, குடகுமலை கோயிலின் அருகே அமைக்கப்பட்ட வாடிவாசலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.

jallikattu

முன்னதாக  300-க்கும் மேற்பட்ட காளைகள், கண்மாய் மற்றும் வயல் வெளியில் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்ட நிலையில், அவற்றை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.அப்போது, திண்டுக்கல் மாவட்டம் குட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பூமிநாதன் என்பவர் மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்று, காளைகளை அடக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக காளை முட்டியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்துர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து  திருப்பத்தூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.