கோவை அருகே அதிவேகமாக வந்த கார் மோதி இளைஞர் பலி!

 
cbe

கோவை மாவட்டம் ஆலந்துறையில் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த இளைஞர் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் ஆலந்துறை பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சபரிநாதன்(21). ஐடிஐ படித்துள்ள இவர் பிளிப்கார்ட் நிறுவனத்தில் டெலிவரிபாயாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று ஆலந்துறை பகுதியில் உள்ள கடையின் அருகே வாடிக்கையாளருக்கு பார்சல் டெலிவரி செய்வதற்காக சபரிநாதன் தனது இருசக்கர வாகனத்தில் நின்றிருந்தார். அப்போது, கோவையில் இருந்து சிறுவாணி நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஓன்று சாலையோரம் வாகனத்தில் அமர்ந்திருந்த சபரிநாதன் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த சபரிநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

accident

தகவல் அறிந்த ஆலந்துறை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து சபரிநாதனின் தந்தை மணி அளித்த புகாரின் பேரில், போலீசார் கார் ஒட்டுநர் திருப்பூரை சேர்ந்த சந்தோஷ் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், சாலையோரம் நின்றிருந்த சபரிநாதன் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.