துறையூர் அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மழைக்காக மரத்தடியில் ஒதுங்கி நின்றவர்கள் மீது இடி தாக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் நகாராஜ்(23). இவர் கேட்டரிங் படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று நாகராஜ், அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகன்கள் நித்திஷ்(12), பிரதீப்(10) உள்ளிட்டோருடன் அருகில் உள்ள சிக்கத்தம்பூர் ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அங்கு அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் நாகராஜும், அவருடன் இருந்த சிறுவர்களும், ஏரிக்கரையில் இருந்த புளிய மரத்தின் அடியில் மழைக்காக ஒதுங்கி நின்றுள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக அவர்கள் மீது இடி தாக்கியது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பிரதீப் உள்ளிட்ட 5 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரதீப் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உப்பிலியபுரம் போலீசார், நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.