திருப்புவனம் அருகே மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி!

 
dead body

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அடுத்த ஓடைப்பட்டியை சேர்ந்தவர் அழகு. இவரது மகன் கருப்பசாமி(20). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள கீழடி பகுதிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கருப்பசாமி, தனது நண்பர்களுடன், அங்குள்ள ஊருணிக்கு மீன் பிடிப்பதற்காக சென்றிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவருக்கு சொந்தமான நெல் வயலில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் அவர் சிக்கிக் கொண்டார்.

sivagangai

இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த திருப்புவனம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தோட்ட உரிமையாளர்  செல்லப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.