கோவையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை... 5 பேர் கும்பல் வெறிச்செயல்!

 
Murder

கோவை உக்கடம் அருகே முன்விராதம் காரணமாக இளைஞர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ்(34), சுரேஷ்(28), வசந்த்(32) மற்றும் பிரகாஷ்(32). இவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி (23), சூர்யா(28), சுரேஷ்(29), சுபாஷ்(23) மற்றும் பாஸ்கரன்(23) தரப்புக்கும் இடையே கஞ்சா விற்பனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. 

coimbatore gh

இந்த நிலையில், நேற்றிரவு சந்தோஷ், சுரேஷ் உள்ளிட்ட 4 பேரும் உக்கடம் பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, பின்னர் ஆட்டோவில் திரும்பி கொண்டிருந்தனர். கெம்பட்டி காலனி அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த முத்துப்பாண்டி தரப்பினர், அவர்களது ஆட்டோவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷ், சுரேஷ் ஆகியோரை சரமாரியாக குத்தினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வசந்த், பிரகாஷ் ஆகியோர் அங்கிருந்து தப்பியோடினர். 

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சந்தோஷ், சுரேஷ் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சந்தோஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சுரேஷுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.