தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது ஆண் குழந்தை பலி... பென்னாகரம் அருகே சோகம்!

 
pennagaram

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகேயுள்ள பொம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் லட்சுமணன் (40) - கன்னியம்மாள் (37) தம்பதி. இவர்களுக்கு 2 மகள்களும், 2 வயதில் சக்திதரன் என்ற மகனும் உள்ளனர். கணவன் - மனைவி இருவரும் வெளியூரில் இருந்து பழங்களை வாங்கி வந்து, விற்பனை செய்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் தம்பதியினர் இருவரும் பழம் வாங்குவதற்காக ஓசூருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால் குழந்தை சக்திதரனை, பென்னாகரம் அடுத்த நெக்குந்தி பகுதியில் உள்ள கன்னியாம்மாளின், அக்காள் பாப்பாத்தியிடம் விட்டு சென்றுள்ளனர். 

pennagaram

இந்த நிலையில், நேற்று மாலை குழந்தை சக்திதரன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், பாப்பாத்தி மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக வெளியே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது சக்திதரனை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாப்பாத்தி, அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். அப்போது, வீட்டின் அருகில் உள்ள தரைமட்ட தொட்டியில் குழந்தை சக்திதரன் நீரில் மூழ்கிய நிலையில் கிடந்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த பாப்பாத்தி, உடனடியாக சக்திதரனை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் சக்திதரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலின் பேரில் பென்னாகரம் போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.