ஜெபம் செய்ய வந்த 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 63 வயது மதபோதகர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்பமாக்கிய 63 வயது மதபோதகர் மற்றும் அவரது மனைவி, மகனை மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் மதபோதகர் ஜான்ரோஸ் (63). இவருக்கு திருமணமாகி 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர் கரும்பாறை பகுதியில் ஜெபக்கூடம் நடத்திவருகிறார். இவரது ஜெபக்கூடத்திற்கு அப்பகுதியை சேர்ந்த பல நபர்கள் பிராத்தனைக்காக வந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்கலை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி தனது 13 வயது சிறுமியுடன் ஜெபக்கூடத்திற்கு பிராத்தனைக்காக சென்றுவந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் வயிற்றுவலியால் அவதிப்பட்ட சிறுமியை பெற்றோர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது, சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, சிறுமி தனிமையில் பிராத்தனைக்கு சென்ற போது மதபோதகர் சிறுமியை மிரட்டி பல முறை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் கேரளாவில் தலைமறைவாக இருந்த மதபோதகர் மற்றும் மனைவி, மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.