மணப்பாறை அருகே பைக் மீது கார் மோதி விபத்து - தம்பதி பலி!

 
accident

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் கணவன் - மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள அழககவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(45). விவசாயி. இவரது மனைவி போதும் பொண்ணு(38). இவர்கள் இருவரும் நேற்று வளநாட்டிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் மாலை வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சொரியம்பட்டி பிரிவு பகுதியில் சரவணன் சாலையை கடக்க முயன்றார். அப்போது, மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார், எதிர்ப்ராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

valanadu

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து, வளநாடு போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.