அவினாசி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்கள் மீது கார் மோதி விபத்து - பெண் பலி!

 
accident

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

திருப்பூரை சேர்ந்தவர் கணேஷ் பிரதீப். இவர் நேற்று தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் இருந்து காரில் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த தண்டுக்காரம்பாளையம் பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், அங்குள்ள பேருந்து நிறுத்ததில் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் பேருந்துக்காக காத்திருந்த புங்கம்பள்ளியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மனைவி பாப்பாத்தி(51) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், தண்டுக்காரன்பாளையத்தை சேர்ந்த காளியம்மாள்(60), மஞ்சுளா(38), சின்னகானூரை சேர்ந்த ரங்கன் என்பவரும், காரில் வந்த கணேஷ் பிரதீப் குடும்பத்தினர் என 7 பேர் பலத்த காயமடைந்தனர். 

avinashi

விபத்தில் சிக்கியவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு திருப்பூர் மற்றும் திருமுருகன்பூண்டி அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவினாசி போலீசார், விபத்தில் பலியான பாப்பாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்கள் மீது கார் மோதி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.