தூத்துக்குடி அருகே ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவி தற்கொலை!
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் செபஸ்தியார் தெருவை சேர்ந்தவர் சார்லஸ் திலக். கூலி தொழிலாளி. இவரது மகள் பூரண வினிதா(19). இவர் அடைக்கலபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில், பூரண வினிதா தனக்கு அந்த கல்லூரியில் படிக்க விருப்பமில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். அப்போது, பெற்றோர் அவரை கண்டித்து படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதனால் அவர் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த பூரண வினிதா சம்பவத்தன்று அதிகாலை தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்வம் குறித்து சார்லஸ் திலக் புகாரின் அடிப்படையில் ஆத்தூர் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.