கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்... மனைவியை சரமாரியாக குத்திக்கொன்ற கணவர்!

 
murder

நெல்லை மாவட்டம் பணகுடியில் கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்துள்ள அன்னாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பணகுடியில் உள்ள தனியார் செங்கல்சூளையில் தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார். முதல் மனைவி உயிரிழந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அமுதா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அமுதாவுக்கு, முதல் கணவர் மூலம் 2 மகள்கள், ஒரு மகன் பிறந்த நிலையில், அனைவரும் தாயுடன் சேர்ந்து வசித்து வந்தனர்.

nellai

இந்த நிலையில், அமுதாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாரியப்பன் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், அமுதா அந்த நபருடன் உறவை கைவிடாமல் தொடர்ந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  மாரியப்பன் நேற்று அமுதாவை காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று உறவை கைடும்படி கூறி கண்டித்துள்ளார். ஆனால் அமுதா கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், மாரியப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய அமுதாவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, மாரியப்பன் பணகுடி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.