ஈரோட்டில் டாஸ்மாக் கடையில் லஞ்ச ஒழிப்பு சோதனை... கணக்கில் வராத ரூ.14,650 பறிமுதல்!
ஈரோட்டில் எலைட் டாஸ்மாக் கடையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய நடத்திய சோதனையில் கணக்கில்வராத ரூ.14,650 பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு வில்லசரம்பட்டி ரோடு மாருதி நகரில் எலைட் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இந்த கடையில் 5 ஊழியர்கள் பணி புரிந்து வரும் நிலையில், மதுபாட்டில்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை ரூ.5 முதல் ரூ.20 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில், ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் டாஸ்மாக் கடையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை சனிக்கிழமை காலை 6 மணி வரை நீடித்தது. இந்த சோதனையின்போது, கடையில் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதற்கான விவரம், விற்பனையான விவரங்களை ஆய்வு செய்தனர். அப்போது, கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டு, கணக்கில் வராத பணம் ரூ.14,650-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்