ஆம்பூர் அருகே தனியார் வங்கி ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி!
ஆம்பூர் அருகே மர்மநபர்கள் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பெரியாங்குப்பம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் அருகே தனியார் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ளனர். பின்னர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் ஏடிஎம்மை உடைக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை பணம் எடுக்க சென்றவர்கள் ஏடிஎம் இயந்திரம் உடைக்க முயற்சி நடைபெற்றதை கண்டு, வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், தனியார் வங்கி அதிகாரிகள், ஆம்பூர் கிராமிய காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.