தருமபுரி சிறையில் அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி

 
dharmapuri

தருமபுரியில் குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய அரசுப்பள்ளி ஆசிரியர் சிறையில் கழுத்தை அறுத்துகொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி அடுத்துள்ள இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் இம்மிடிநாய்க்கனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்தமிழ்செல்வி. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ஆசிரியர் செந்தில்குமாருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

dharmapuri ttn

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆசிரியர் செந்தில்குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து முத்தமிழ்செல்வியை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த முத்தமிழ்செல்வியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய ஆசிரியர் செந்தில்குமாரை கைது செய்தனர்.

தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தருமபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிறையில் டீ குடிக்க அளித்த டம்ளரை நெளித்து கூர்மையாக்கி கழுத்தை அறுத்துகொண்டு ஆசிரியர் செந்தில்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை சிறைக்காவலர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.