தென்காசி அருகே ஆட்டோ ஓட்டுநர் படுகொலை - மர்மநபர்கள் வெறிச்செயல்!
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே ஆட்டோ ஓட்டுநர் மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள கீழஇலஞ்சி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்ன இசக்கி என்கிற மங்காத்தா (35). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி நந்தினி (32). இவர்களுக்கு கவின் (15), அபிநயா (10) என 2 பிள்ளைகள் உள்ளனர். நந்தினி, தென்காசியில் உள்ள பாத்திரக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், சின்னஇசக்கி நேற்று இரவு தனது வீட்டின் முன்பு வீட்டுவாசலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் சின்ன இசக்கியை சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடினர்.
இன்று காலை நந்தினி சென்று பார்த்தபோது சின்ன இசக்கி சடலமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சின்ன இசக்கியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கொலையான ஆட்டோ ஒட்டுநர் சின்னஇசக்கிக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புள்ளது தெரியவந்தது. இதனால் அவர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கொலை நடைபெற்ற இடத்தை தென்காசி டிஎஸ்பி மணிமாறன் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.