வீட்டில் தனக்கு தானே பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தை பலி - பெண் மீது வழக்குப்பதிவு!

 
infant

கோவையில் வீட்டில் தனக்குத் தானே பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

கோவை செட்டி வீதி அருகே உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (38). நகை பட்டறை தொழிலாளி. இவரது மனைவி புண்ணியவதி (32). இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மீண்டும் கர்ப்பமடைந்த புண்ணியவதி நிறை மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் தனக்கு தானே அவர் பிரசவம் பார்த்து கொண்டுள்ளார். அப்போது, அவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

coimbatore gh

இந்த நிலையில், குழந்தையின் தொப்புள் கொடியை சரியாக அறுக்கவில்லை என கூறப்படுகிறது. இதில், புண்ணியவதி மற்றும் குழந்தை ஆகியோர் மயக்கமடைந்துள்ளனர். இதனை அடுத்து, உறவினர்கள் தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், முறையாக பிரசவம் பார்க்காததால் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் பெரியகடை வீதி காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, வீட்டில் தனக்கு தானே பிரசம் பார்த்துக் கொண்ட புண்ணியவதி மீது இந்திய தண்டனை சட்டம் 315-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தாய் தனக்குத்தானே பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.