பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி!

 
suicide

பெரம்பலூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

பெரம்பலூர் மாவட்டம் வடக்குமாதவி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சத்யா. இவர்களது 5 வயது மகன் சுதர்சன். கடந்த சில நாட்களுக்கு முன் சத்யா, தனது மகன் சுதர்சனை அழைத்துக்கொண்டு வேப்பந்தட்டை அருகே அனுக்கூர் குடிகாட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று காலை சிறுவன் சுதர்சன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கு பின் சென்று பார்த்தபோது அவனை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் சத்யா மற்றும் உறவினர்கள் சுதர்சனை பல்வேறு இடங்களில் தேடினர். 

perambalur gh

இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள தனியார் விவசாய கிணற்றின் அருகே சுதர்சனின் செருப்பு மற்றும் விளையாட்டு பொம்மைகள் கிடப்பது தெரிய வந்தது. இதனால் அவன் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகமடைந்த உறவினர்கள், இது குறித்து பெரம்பலூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் மங்கலமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினர். 

அப்போது, சிறுவன் சுதர்சன் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து, போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தாய் சத்யா அளித்த புகாரின் அடிப்படையில் மங்கலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.