கோபிசெட்டிபாளையம் அருகே துணிகரம்... வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு!

 
robbery

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புதுப்பாளையம் தங்கமணி எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி பழனியம்மாள்(53). இவர்களுக்கு வெங்கடாசலம், ரகுநாதன் என்ற 2 மகன்களும், கோப்பெருந்தேவி என்ற மகளும் உள்ளனர். வெங்கடாசலம் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ரகுநாதன், பழனியம்மாள் வீட்டின் அருகிலேயே குடியிருந்து வருகிறார். ஈரோட்டில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில், பழனியம்மாள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள மகன் வெங்கடாசலம் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை பழனியம்மாள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து ரகுநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். ரகுநாதன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டின் அறையில்  2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த  14 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

erode generic

இதுகுறித்து தகவல் அறிந்த கோபிசெட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார் விஜயம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.