கோவையில் சூயஸ் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!
கோவையில் பள்ளி மைதானத்தில் சூயஸ் குடிநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சூயஸ் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அங்கு கூடிய பள்ளி மாணவர்கள், சூயஸ் திட்டத்தில் பள்ளி மைதானத்தில் நடந்து வரும் குடிநீர் தொட்டி பணிகளை நிறுத்த கோரியும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில மாணவர்கள் மரத்தின் மீது ஏறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் சூயஸ் தண்ணீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த 8 மாணவர்கள் மீது நோய்தொற்று பரவல் கட்டுப்பாடுகளை மீறி கூடியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.