தொடர் மழை எதிரொலி... ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவு!

 
cattle market

தொடர் மழை காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு நேற்று மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரை அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை கரவை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக கடந்த வாரம் கூடிய மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து குறைவாகவே இருந்தது. இந்த நிலையில், நேற்று 2-வது வாரமாக மழை காரணமாக மாடுகள் வரத்து குறைந்தது. நேற்று 250 பசு மாடுகள், 200 எருமை மாடுகள், 50 கன்றுகள் என மொத்தம் 500 மாடுகள் மட்டுமே வந்திருந்தன. 

cattle market

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வியாபாரிகள் வந்திருந்தனர். ஆனால் கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. குறிப்பாக கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் நேற்று நடந்த மாட்டு சந்தையில், கேரளா மாநில வியாபாரிகள் வரவில்லை. கர்நாடகம், ஆந்திரா போன்ற ஒரு சில மாநிலங்களில் இருந்து குறைவான எண்ணிக்கையில் வியாபாரிகள் வந்திருந்தனர். நேற்று சந்தை வரத்தாகிய 80 சதவீத  மாடுகள்  விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.