ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்... கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

கேரள இளைஞர் செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்ததால், கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள கருமானூர் விராலிவிளைவீடு சேர்ந்தவர் ஸ்டான்லி - பீனா. இவர்களது மகள் ஆதிரா(19). இவர் அப்பகுதியில் உள்ள கலை கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். ஆதிராவின் தாயார் பீனா வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், ஆதிரா பளுகலில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். 

kumari

இந்த நிலையில், ஆதிராவுக்கு கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் வாட்ஸப் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்த இளைஞர், ஆதிராவை காதலிப்பதாக கூறி ஆபாசமாக வீடியோ எடுத்து, அதனை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த மாதம் ஆதிரா தரப்பில் குமரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார்  அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், நேற்று ஆதிரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் பளுகல் போலீசார், ஆதிராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.