நாமக்கல் அருகே கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

 
dead

நாமக்கல் அருகே மாயமான கல்லூரி மாணவர், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் விக்னேஷ்வர்(24). இவர் ராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி விக்னேஷ்வர், நாமக்கல் அடுத்த கொசவப்பட்டியில் தாங்கள் புதிதாக கட்டிவரும் வீட்டை பார்ப்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். 

namakkal GH

இந்த நிலையில், நேற்று நாமக்கல் ரயில் நிலையம் அருகில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் மிதப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கிணற்றில் இருந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், கிணற்றின் அருகில் நின்ற இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை போலீசார் கைப்பற்றி இறந்த நபர் யார்? என விசாரித்தபோது, அவர் கல்லூரி மாணவர் விக்னேஷ்வர் என்பது தெரியவந்தது. 

இதனை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்வர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை கொலை செய்யப்பட்டு உடல் கிணற்றில் வீசப்பட்டதா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.