திருச்சி அருகே கம்பரசர் வண்டி உரிமையாளர் கொலை; மனைவியின் கள்ளக்காதலன் கைது!

 
murder

திருச்சி அருகே கள்ளக் காதலியின் கணவரை கழுத்தை நெரித்துக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். 

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள ஊட்டத்தூரை சேர்ந்தவர் மணி(38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். மணி, கம்பரசர் வண்டி தொழில் செய்து வந்தார்.  அதே பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்(46). இவரும் கம்பரசர் வண்டி வைத்துள்ள நிலையில், இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. மேலும், மணியின் மனைவிக்கும், சிவகுமாருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகுமார், தனது வீட்டில் மணியுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது, மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவகுமார், அருகில் கிடந்த கயிற்றை எடுத்து மணியின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் மயக்கமடைந்த நிலையில், அவர் மதுபோதையில் இருப்பதாக கூறி நண்பர்கள் மூலம் அவரது வீட்டில் விட்டுள்ளார்.

arrest

இந்த நிலையில், மணியின் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இது குறித்து சிறுகனூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சிவகுமாரை கைது செய்தனர்.