ஈரோட்டில் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 போலீசாருக்கு கொரோனா... தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

 
police

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 2 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 6 போலீசாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் இன்ஸ்பெக்டருக்கு கடந்த சில தினங்களாக சளி தொந்தரவு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அவர் கொரோனா பரி சோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 

இதைப்போல், வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டருக்கு திடீரென சளி தொந்தரவு ஏற்பட்டது. இதை அடுத்து  கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடம்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

corona

இதைப்போல், ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப் -இன்ஸ்பெக்டர், முதல் நிலை காவலர், பெருந்துறை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் தலைமை காவலர்,  என 3 பேருக்கும் சளி காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவர்கள் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் மூவரும் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து, கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி ஊழியர்கள் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்தனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போலீசார் அனைவரும் ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளதால் அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. லேசான அறிகுறிதான் ஏற்பட்டது உள்ளது.