தஞ்சை அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை... தனியார் நிதி நிறுவனம் மீது போலீசில் புகார்!

 
poison

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே  தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மேலப்பூவாணத்தை சேர்ந்தவர் அருள்சாமி. இவரது மனைவி சவரியம்மாள். இவர்களுக்கு ஆரோக்கிய செபாஸ்டியன் உள்ளிட்ட 2 மகன்கள் உள்ளனர். தம்பதியினர் இருவரும் பொள்ளாச்சியில் பலகாரக்கடை நடத்தி வந்த நிலையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பினர். இந்த நிலையில், அருள்சாமி வீடு கட்டுவதற்காக பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கி உள்ளார்.

இதற்காக முறையாக தவணை செலுத்தி வந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக வருமானம் இல்லாததால் கடந்த 2 மாதங்களாக தவணை செலுத்தவில்லை. இதனால் தவணை செலுத்துமாறு நிதி நிறுவன ஊழியர்கள் அருள்சாமி குடும்பத்தினருக்கு அழுத்தும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதியினர் இருவரும் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த அருள்சாமி, அவரது மனைவி சவரியம்மாள் ஆகியோர் பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

thanjavur

மயங்கிய நிலையில் கிடந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். நிதி நிறுவனத்தினர் அளித்த நெருக்கடி காரணமாக தனது பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவர்களது மகன் ஆரோக்கிய செபாஸ்டியன் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நிதி நிறுவன நெருக்கடியால் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.