விளாத்திகுளம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முதியவர் கைது... சிசிடிவி கேமராவால் போலீசிடம் சிக்கினார்!

 
vilathikulam

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தினசரி சந்தை பகுதியில் கடந்த 18ஆம் தேதி இரவு ஸ்டாலின் பெஞ்சமின் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் பூட்டை உடைத்து, ரூ.80 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், விளாத்திக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் முதியவர் ஒருவர் நள்ளிரவில் கடையில் புகுந்து பணத்தை திருடியது தெரியவந்தது. 

vilathikulam

இதனை அடுத்து, சிசிடிவி பதிவு அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட முதியவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு விளாத்திகுளம் பேருந்து நிலையம் பகுதியில்  சைக்களில் சுற்றித்திரிந்த  முதியவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த ராஜேந்திரன்(71) என்பதும், அவர் மளிகைக் கடையில் ரூ.80 ஆயிரம் பணத்தை திருடியதும் தெரிய வந்தது. 

மேலும், அவர் விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 30-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், சைக்கிளில் சென்று திருட்டு சம்பவங்களை அரங்கேற்றியும் தெரிய வந்தது. இதனை அடுத்து, ராஜேந்திரனை கைதுசெய்த போலீசார், வேறு ஏதும் கொள்ளை சம்பவத்தில் அவருக்கு தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.