பேன்சி ஸ்டோர் உரிமையாளர் மனைவி முகத்தில் பூச்சிமருந்தை அடித்து செயின் பறிப்பு - பெண் கைது!

 
45

கோவையில் பேன்சிகடை உரிமையாளரின் மனைவி முகத்தில் பூச்சிமருந்தை அடித்து, 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரி ரங்கண்ண கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் ரத்தினபுரி 7-வது வீதியில் தண்டு மாரியம்மன் கோவில் அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் இவரது மனைவி செல்வராணி(57) கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, கடைக்கு வந்த பெண் ஒருவர் சில பொருட்களை எடுத்துகொடுத்து, அதனை கிப்ட் பேப்பரில் பேக்கிங் செய்து தருமாறு தெரிவித்தார்.

45

இதனை அடுத்து, செல்வராணி அவற்றை பேக்கிங் செய்ய முயன்றபோது, திடீரென அந்த பெண் செல்வராணியை வளைத்துப்பிடித்து, அவரது முகத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை அடித்தார். பின்னர், அவர் செல்வராணி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராணி, நகையை பறிக்க விடாமல், கூச்சலிட்டபடி அந்த பெண்ணுடன் கட்டிப்புரண்டு சண்டையிட்டார். எனினும் அந்த பெண், 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு கடையில் இருந்து தப்பியோடினார்.

45

அவரை துரத்திக்கொண்டு செல்வராணியும் பின்தொடர்ந்து சென்றார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து, ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அவரிடம் இருந்த நகையை பறிமுதல் செய்து போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், நகையை பறித்த பெண் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஆட்டுக்குளத்தை சேர்ந்த தவமணி என்பதும், அவர் மீது திருப்பூரில் இதே போன்று திருட்டு வழக்கு உள்ளதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார் தவமணியை கைது செய்தனர்.