தென்காசி அருகே வரப்பு தகராறில் விவசாயி வெட்டிக்கொலை!

 
murder

தென்காசி அருகே வரப்பு வெட்டுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயியை வெட்டிக்கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (64). விவசாயி. இவரது மகன் கார்த்திகேயன் (32). இவர்களுக்கு சொந்தமான வயல் பகுதி வைரவன்குளம் பகுதியில் உள்ளது. இந்த வயல்களுக்கு அருகில் சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தனபாண்டியன் (40) என்பவருக்கு சொந்தமான வயலும் உள்ளது. இவர்களுக்கு இடையே வரப்பு தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

tenkasi ttn

இந்த நிலையில், நேற்று கருத்தப்பாண்டியும், அவரது மகன் கார்த்திகேயனும், வைரவன்குளத்தில் உள்ள தங்களது வயலில் வரப்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சந்தனபாண்டியன், தனது வரப்பை எப்படி நீங்கள் வெட்டலாம் என்று கூறி கருத்தப்பாண்டி மற்றும் கார்த்தியேனுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும், ஆத்திரமடைந்த சந்தனபாண்டியன் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கருத்தப்பாண்டியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார்.

இதில் பலத்த காயமடைந்த கருத்தப்பாண்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கருத்தப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளி சந்தனபாண்டியனை கைதுசெய்தனர்.