மேலூரில் தந்தை, மகன் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை!
மதுரை மாவட்டம் மேலூரில் மகன் தற்கொலை கொண்டதால் வேதனையில் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் காந்திநகரை சேர்ந்தவர் அழகன்(56). இவர் மேலவளவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நாச்சயம்மாள் என்ற மனைவியும், தமிழ்வாணன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகளுக்கு திருமணமான நிலையில், மருத்துவரான தமிழ்வாணன், தற்போது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், அழகனுக்கும், அவரது மனைவி நாச்சம்மாளுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதேபோல் நேற்று மதியம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த தமிழ்வாணன், தனது அறையை உட்புறமாக பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துச்சென்று தமிழ்வாணனை மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தமிழ்வாணனை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அழகன் தனது வீட்டிற்கு வந்து மகன் தற்கொலை செய்த அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த மேலவளவு போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகன் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியில் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.