மதுபோதையில் தகராறு செய்த மகனை அடித்துக்கொன்ற தந்தை... களியக்காவிளை அருகே பரபரப்பு!

 
Murder

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை, தந்தை உருட்டு கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே இடைக்கோடு பாலோட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் செல்லன் (70). இவரது மகன் ரெஜிகுமார் (37). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. மதுப்பழக்கத்திற்கு அடிமையான ரெஜிகுமார், வேலைக்கு செல்லாமல் நாள்தோறும் குடித்துவிட்டு பெற்றோருடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ரெஜிகுமார், தனது தாய் - தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தந்தை செல்லனை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த செல்லன் அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து ரெஜிகுமாரின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயமடைந்த ரெஜிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

arrest

இதுகுறித்து தகவல் அறிந்த பளுகல் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெஜிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனை அடித்து கொன்ற செல்லனை கைது செய்தனர். மதுபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.