ஈரோடு அருகே பெண் வங்கி அதிகாரி தூக்கிட்டு தற்கொலை!
ஈரோடு அருகே பெண் வங்கி அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி மனைவி பொன்மணி. இவரது இளைய மகள் வித்யபாரதி (24). இவர் சென்னையில் வங்கி அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், வித்யபாரதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் பணியில் இருந்து விலகிய அவர், புஞ்சை புளியம்பட்டியில் தனது தாயுடன் வசித்து வந்தார். இதனிடையே, உடல்நல குறைவால் வேலைக்கு செல்ல முடியவில்லை என வித்யபாரதி மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
அவருக்கு தாய் பொன்மணி, அக்கா மஞ்சுபார்க்கவி ஆகியோர் ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று தாயார் பொன்மணி மருத்துவ பரிசோதனைக்காக சத்தியமங்கலத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது, வித்யபாரதி தனது அறையில் தூக்கிட்ட நிலையில் தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வித்யபாரதியை மீட்டு புஞ்சை புளியம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வித்யபாரதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்.
தகவல் அறிந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார், வித்யபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தாய் பொன்மணி அளித்த புகாரின் பேரில், புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.