புதுக்கோட்டை அருகே காரில் கஞ்சா கடத்தல் - விஏஓ உள்பட 3 பேர் கைது!

 
pdkt

புதுக்கோட்டை அருகே காரில் கஞ்சா கடத்திய கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 3 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1.7 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கேப்பரை பகுதியில் மாவட்ட எஸ்.பி. தனிப்படை போலீசார் சனிக்கிழமை இரவு  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, காரில்  1.7 கிலோ அளவிலான கஞ்சா கடத்திச்சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக காரில் வந்த 3 நபர்களை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் ஆலங்குடி அடுத்த கத்தகுறிச்சி கிராமத்தை சேர்ந்த ஜெய ரவிவர்மா(34), ஆட்டாங்குடியை சேர்ந்த கணேசன்(45) மற்றும் கரைக்குடியை சேர்ந்த சூர்ய சந்திர பிரகாஷ்(31) ஆகியோர் என தெரியவந்தது. 

pudukottai

மேலும், ஜெய ரவிவர்மா, கோவிலூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிவதும், கணேசன் முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, 3 பேரையும் வல்லத்திராகோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்த போலீசார், 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.