தருமபுரி அருகே ஏரியில் மூழ்கி அரசுப்பள்ளி மாணவி பலி!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி அரசுப்பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மகேந்திர மங்கலம் பொம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலன். விவசாயி. இவரது மகள் செல்லக்கிளி(14). இவர் ஜெக்கசமுத்திரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி அளவில் மாணவி செல்லக்கிளி, அங்கள்ள ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார்.
இதனிடையே, 6 வழிச்சாலை பணிகள் நடைபெறுவதால் சாலை பணிகளுக்காக ஏரியில் இருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் மண் அள்ளியதால் ஏரியில் உள்ள குழிகளில் அதிகளவு மழைநீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக குழிக்குள் தவறி விழுந்து மாணவி செல்லக்கிளி, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் மகேந்திரமங்கலம் போலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.