மணப்பாறை அருகே கிணற்றில் மூழ்கி பாட்டி, பேத்தி பலி!

 
drowning

மணப்பாறை அருகே கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி பாட்டி, பேத்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள தோப்புபட்டியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி செல்லம்மாள்(70). இவரது மகன் பெருமாளின் மகள் சத்தியபிரியா(17). இவர் மணப்பாறையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை செல்லம்மாள் மற்றும் சத்தியபிரியா ஆகியோர் அங்குள்ள விவசாய கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

trichy

கிணற்றுக்கு சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது, கிணற்றின் அருகே செல்லம்மாள், சத்தியபிரியா ஆகியோரது உடைகள் கிடப்பது தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள், இதுகுறித்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, செல்லம்மாள், சத்தியபிரியா ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து, இருவரது உடல்களையும் புத்தாநத்தம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்வம் குறித்து பெருமாள் அளித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் மூழ்கி பாட்டி, பேத்தி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.