மதுரையில் கார் மோதி பாட்டி, பேரன் பலி - 2 சிறுவர்கள் படுகாயம்!

 
madurai

மதுரை ஆரப்பாளையத்தில் அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் பாட்டி, பேரன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர்.

மதுரை வைகை வடகரை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி  சுப்புலட்சுமி (60). இவர்களது பேரன் ஆகாஷ் (13). நேற்று மாலை சுப்புலட்சுமி, பேரன் ஆகாஷுடன் கடை வீதிக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கி உள்ளார். பின்னர் இருவரும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். ஆரப்பாளையம் அருகே உள்ள புட்டுதோப்பு பகுதியில் அவர்கள் நடந்து சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக இருவர் மீதும் மோதியது. இந்த விபத்தில் சுப்புலட்சுமி, அவரது பேரன் ஆகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் அந்த பகுதியில் சென்ற  பிரபாகரன்(13), முத்துக்குமார்(15) ஆகியோர் மீது மோதியதில்,  2 சிறுவர்களும் பலத்த காயமடைந்தனர். 

accident

விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த பொதுமக்கள், காயமடைந்த 2 சிறுவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்தில் பலியன சுப்புலட்சுமி, ஆகாஷ் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கார் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.