பெரம்பலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி!

 
wall collapse

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மங்களம் கிராமம் கிழக்கு காலனி தெருவை சேர்ந்தவர் பழனிமுத்து. இவரது மனைவி பாப்பா(72 ). இவர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் பின்னால் சென்றுள்ளார். அப்போது, மழையின் காரணமாக சேதமடைந்திருந்த வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து  மூதாட்டி பாப்பா மீது விழுந்தது. இதில், அவது இடுப்புக்கு கீழ் பகுதி இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டது.

perambalur

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பாப்பா பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த மங்களமேடு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார்  வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.