கோவை சொக்கம்புதூரில் மயான கொள்ளை நிகழ்ச்சி - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

 
உநெ

மகா சிவராத்திரியை ஒட்டி கோவை சொக்கம்புதூரில் மயான கொள்ளை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை சொக்கம்புதூர் பகுதியில் மகா சிவராத்திரி மற்றும் மாசி மாத அமாவாசையை ஒட்டி நேற்றிரவு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி, சொக்கம்புதூர் மயானத்தில் மண்ணில் மாசாணியம்மன் சிலை செய்து, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, சொக்கம்புதூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிலிருந்து பம்பை, உடுக்கை முழங்க ஊர்வலமாக மயானத்திற்கு புறப்பட்டு வந்த கோவில் பூசாரி, மாசாணியம்மனை சுற்றி ஆக்ரோஷமாக நடமானடி பூஜை நடத்தினார். பின்னர் மாசாணி அம்மனின் இதய பகுதியில் வைக்கப்பட்டிருந்த மனித எலும்பை வாயில் கடித்தபடி நடனமாடினார்.

Mayankollai

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் மாசாணியம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து, மாசாணியம்மன் சிலையில் இருந்து மண் எடுத்துச்செல்லப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவில் நடத்தப்படும் மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என நம்பிக்கை உள்ளது. இந்த நிலையில், சொக்கம்புதூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று திருக்கல்யாண வைபவமும், மதியம் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவர்.