மாணவர்களை சாதி பெயரை சொல்லி திட்டிய விவகாரம்... தலைமை ஆசிரியை கைது!

 
tiruppur

திருப்பூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களை சாதி பெயரை சொல்லி திட்டிய புகாரின் பேரில்,  தலைமை ஆசிரியையை போலீசார் கைது செய்தனர். 

திருப்பூர் மாவட்டம் இடுவாயில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில், கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி கழிவறையை பட்டியலின மாணவ - மாணவிகளை சுத்தம் செய்ய கூறியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவ - மாணவிகளை சாதி பெயரை கூறி திட்டியதாகவும் தலைமை ஆசிரியை கீதா மீது புகார் எழுந்தது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமை ஆசிரியை கீதா மீது திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், கடந்த டிசம்பர் 18ஆம் தேதி தலைமை ஆசிரியை கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

tiruppur

இந்த விவகாரம் குறித்து கடந்த மாதம் 24ஆம் தேதி ஆதிதிராவிடர் நலத்துறையின் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணகுமார், தலைமை ஆசிரியை கீதா மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி, மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தலைமை ஆசிரியை கீதா மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதனிடையே, கீதா வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான விசாரணையின்போது நீதிமன்ற அறிவுரைப்படி, திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன், முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கீதாவை நேற்று மங்கலம் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.