போதையில் தகராறு செய்த கணவர் தலையில் கல்லை போட்டு கொலை.... போலீசுக்கு தகவல் கூறிவிட்டு மனைவி ஓட்டம்!

 
melur

மேலூர் அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்ட் ஆக உள்ளார். இவருக்கு ஷீலா என்ற மனைவியும்,  விஜயதர்ஷினி, விஜயராமன் என்ற 2 பிள்ளைகளும் உள்ளனர். அனைவரும் மேலூர் அருகே எம்.மலம்பட்டியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். ஷீலா, பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இதனிடையே, மணிகண்டன் குடித்துவிட்டு அடிக்கடி மதுபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

women murder by her husband and son

நேற்று ஞாயிற்றுக் கிழமையையொட்டி,  மணிகண்டன் இறைச்சி வாங்கிக்கொண்டு மனைவி ஷீலாவிடம் கொடுத்து சமைக்க சொல்லியுள்ளார்.  மேலும், மதுபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஷீலா வீட்டிலிருந்த அம்மிக்கல்லை எடுத்து மணிகண்டன் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஷீலா மேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு குழந்தைகளுடன் தப்பித்து சென்றார்.

தொடர்ந்து, மேலூர் டிஎஸ்பி பிரபாகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து மணிகண்டன் உடலை மீட்டூ பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மணிகண்டனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், அதில் ஷீலா அம்மிக்கல்லை போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.