துறையூர் தனியார் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!

 
thuraiyur

துறையூரில் உள்ள தனியார் விடுதி அறையில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஏம்பலம் நரிக்குறவர் தெருவை சேர்ந்தவர் சபரீசன்(21). சென்னை தாம்பரம் கடம்பேரி பகுதியை சேர்ந்த நிஷா நந்தினி(20). இவர்கள் நேற்று முன்தினம் மாலை திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி அறை எடுத்து தங்கி இருந்தனர்.  இருவருக்கும் நேற்று காலை விடுதி ஊழியர்கள் உணவு வாங்கி கொடுத்த நிலையில், மதிய உணவை தாங்களே வந்து வாங்கி கொள்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றுள்ளனர்.

poison

பின்னர் நீண்டநேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அறைக்கதவை தட்டி உள்ளனர்.  அப்போது, அறைக்கதவு திறக்காததால் அதனை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தனர். அப்போது, சபரீசன் மற்றும் நிஷா நந்தினி ஆகியோர் மூக்கில் நுரை தள்ளிய நிலையில் படுக்கையில் சடலமாக கிடந்தனர். அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள், துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தற்கொலை செய்துகொண்ட நிஷா நந்தினிக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும், தாம்பரம் காவல் நிலையத்தில் அவரை காணவில்லை என கூறி கணவர் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் புகார் அளித்ததும் தெரிய வந்தது. இதனால், சபரீசனுக்கும், நிஷா நந்தினியும் கள்ளக்காதலர்களாக இருக்கலாம் என்றும், குடும்பத்தினர் எதிர்ப்பு காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.