சேலத்தில் பொறியாளர் வீட்டில் கார், ரூ.50 ஆயிரம் பணம் உள்ளிட்டவை கொள்ளை - மர்மநபர்கள் கைவரிசை!

 
robbery

சேலம் அருகே பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து கார், ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம் அருகேயுள்ள ரெட்டிப்பட்டி ஆண்டிகவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு தினேஷ் என்ற மகன் உள்ளார். பொறியாளரான கோவிந்தராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளி நாட்டில் வசித்து வரும் நிலையில், அவரது மாமனாரான பழனிசாமி அவர்களது வீட்டை பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கோவில் திருவிழாவுக்காக பழனிசாமி காமநாயக்கன்பட்டிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் அன்று நள்ளிரவில் கோவிந்தராஜின் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவை துணியால் மூடிவிட்டு பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம், வெள்ளிப்பொருட்கள் மற்றும் வீட்டில் நின்ற காரை திருடிச்சென்றனர். 

salem

நேற்று அதிகாலை கோவிந்தராஜ் ஆன்லைன் மூலம் தனது வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்தபோது அது துணியால் மூடிப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து, மாமனார் பழனிசாமிக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் பழனிசாமி சென்று பார்த்தபோது, வீட்டிலிருந்த கார், பணம் உள்ளிட்டவை திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கோவிந்தராஜ், சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.