காஞ்சிபுரம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்!
காஞ்சிபுரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 235 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டார்.
இதனை தொடந்து, காஞ்சிபுரம் நகரம் மற்றும் காரைப்பேட்டை பகுதிகளில் வசிக்கும் இருளர் இன மக்கள் 15 குடும்பங்களுக்கு ரூ.13 லட்சம் மதிப்பில் புஞ்சையரசன்தாங்கல் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, உதவி ஆட்சியர்(பயிற்சி) அர்பித் ஜெயின், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.