வெளி நாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 69 பேரை தனிப்படுத்தி கண்காணிப்பு!

 
corona

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக வெளி நாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 69 பேரை, சுகாதாரத்துறையினர் வீடுகளில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஓமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதாரத் துறையினர் உஷார் படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் பல்வேறு வெளி நாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். நேற்று முன்தினம் வரை வெளி நாடுகளில் இருந்து 69 பேர் ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.

அவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை முடிந்து நெகட்டிவ் என்ற முடிவுடன் அவரவர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். எனினும் அவர்கள் ஒரு வாரத்திற்கு வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுடன் தொடர்பு இருப்பவர்களும் ஒரு வாரத்திற்கு வெளியே வர வேண்டாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் தினமும் சுகாதாரத்துறை சார்பில் செவிலியர்கள் மற்றும் சுகாதார குழுவினர் சென்று கண்காணித்து வருகின்றனர்.  

erode

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:- ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தி அவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் நேற்று முன்தினம் வரை பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 69 பேர் விமானம் மூலம் வந்துள்ளனர். அவர்கள் தங்கள் வீடுகளில் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கி இருக்கும் பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர். ஒரு வாரம் கழிந்ததும் மீண்டும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் அவர்களுக்கு பாதிப்பில்லை என்று முடிவு வந்தால் அவர்கள் வெளியே நடமாடலாம்.

பாதிப்பு என்று முடிவு வாழ்ந்தால் உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும். மேலும் அவர்களுக்கு எந்த வகையான வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக, அவர்களது சளி, ரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். எனினும் ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை ஓமைக்ரான் பரவிய நாடுகளில் இருந்து எந்த ஒரு வெளிநாட்டு பயணிகளும் வரவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.