வாடிப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகை, பணம் கொள்ளை!

 
robbery robbery

வாடிப்பட்டியில் ஓய்வுபெற்ற பஞ்சாலை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகைகள், ரூ.1.10 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(55). இவர் பஞ்சாலையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இந்த நிலையில், கோபாலகிருஷ்ணன், கடந்த 16ஆம் தேதி குடும்பத்துடன் தனது ஊரான பழைய வத்தலகுண்டிற்கு சென்றிருந்தார். பின்னர், நேற்று மாலை 6 மணியளவில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. 

madurai

இதனால், அதிர்ச்சியடைந்த கோபாலகிருஷ்ணன் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 47 பவுன் தங்க நகைகள், ரூ.1.10 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோபாலகிருஷ்ணன், வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.