கரூரில் சமையல் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை - போலீசார் விசாரணை!

 
karur

கரூரில் வீட்டின் முன் மது அருந்துவதை தட்டிக்கேட்ட சமையல் தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற 2 நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் பாதை பகுதியை சேர்ந்தவர் சரவணன்(45). சமையல் தொழிலாளி. கடந்த புதன்கிழமை இரவு சரவணன் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அவரது வீட்டின் முன்  2 நபரகள் மது அருந்தி உள்ளனர். இதனை கண்ட சரவணன், அவர்களிடம் சென்று தனது வீட்டின் முன் ஏன் மது அருந்துகிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது, சரவணனுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் சரவணனை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கரூர் நகர போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

karur

மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சரவணனை கொலை செய்தது பிரபல ரவுடிகளான பென்சில் என்கிற தமிழரசன் மற்றும் சஞ்சய் என்கிற சஞ்சய் குமார் ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.