கோவை அருகே குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்!

 
leopard

கோவை அருகே குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட மதுக்கரை, சுகுணாபுரம், மயில்கல் ஆகிய வனப்பகுதியின் அருகே அமைந்துள்ளன. குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதிக்குள் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி நுழைவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக மதுக்கரை அருகே உள்ள சுகுணாபுரம் குடியிருப்பு பகுதியில் மாலை நேரத்தில் சிறுத்தை உலா வருவதாக கூறப்படுகிறது. இதனை நேரில் கண்டவர்கள், உடனடியாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

coimbatore

அதன் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வுசெய்தபோது, அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, சுகுணாபுரம், கோலமாவு மலை பகுதியில் உள்ளவர்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ப்பதற்காக தனியாக செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பேசிய அந்த பகுதி மக்கள், சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தும், அதனை பிடிக்க எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். எனவே உடனடியாக கூண்டு வைத்து சிறுத்தை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு விட வேண்டுமெனவும், மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பாக சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டுமெனவும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.