வயது வித்தியாசத்தால் பெற்றோர் எதிர்ப்பு... காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

 
poison

பெரம்பலூர் அருகே வயது வித்தியாசத்தால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் மழவராயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் நவீன்குமார்(19). இவர் அரியலூரில் உள்ள அனாதை விடுதி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அப்போது, உடன் பணிபுரியும் அம்பாவூரை சேர்ந்த ராசாத்தி(21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதல் மலர்ந்துள்ளது. இதனிடையே, நவீன்குமாருக்கு வயது குறைவு காரணமாக இருவீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு நவீன்குமார், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மூங்கில்பாடியில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு ராசாத்தியை அழைத்துச் சென்றுள்ளார்.

perambalur

நேற்று வீட்டில் தனியாக இருந்த இருவரும்  திருமணம் செய்து கொண்டாக தெரிகிறது. பின்னர், உறவினர்கள் தங்களை பிரித்துவிடுவார்கள் என அச்சமடைந்த காதல்ஜோடிகள் தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்து விஷத்தை குடித்துள்ளனர். பின்னர், உயிர் பயத்தில் இருவரும் இருசக்கர வாகனம் மூலம் குன்னம் அரசு மருத்துவமனைக்கு சென்று விஷம் குடித்ததை  தெரிவித்து சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார், விசாரித்து வருகின்றனர். வயது வித்தியாசத்தால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.