சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு ஆயுள் தண்டனை... மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
மதுரை சமயநல்லூர் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அடுத்த ஊர்மெச்சிகுளம் சின்னையா கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன் மகன் பாஸ்கரன்(48). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றார் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் பாஸ்கரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இறுதி விசாரணை நேற்று நிறைவடைந்தது. இதனை அடுத்து, நீதிபதி கிருபாகரன் மதுரம், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பாஸ்கரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய சமயநல்லூர் காவல் ஆய்வாளர் க்ரேஸ் சோபியா பாய் மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் கவிதா ஆகியோருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.