வேலூரில் மாயமான மெக்கானிக் கொலை செய்து புதைப்பு... சிறுவன் உள்பட மூவர் கைது!

 
murder

வேலூரில் முன்விரோதம் காரணமாக மெக்கானிக்கை கொலை செய்து உடலை புதைத்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் பெருமுகை பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மகன் பாலமுருகன்(20). இவர் இருசக்கர வாகன பழுதுநீக்கும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பாலமுருகன் மாயமாகினார். குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், இதுகுறித்து தந்தை சுந்தரராஜன் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பாலமுருகனை தேடி வந்தனர். 

arrest

மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் பாலமுருகனின் நண்பர்களான  தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்வரன்(19), மதிவாணன்(18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முன்விரோதம் காரணமாக அவர்கள் பாலமுருகனுக்கு மதுவாங்கி கொடுத்து அவரை கொலை செய்தது தெரியவந்தது. மேலும், உடலை தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள காலி நிலத்தில் புதைத்து வைத்ததும் தெரியவந்தது. 

இதனை அடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் கொலையான பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக மெக்கானிக்கை நண்பர்களே படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.