ராசிபுரம் அருகே நாய்கள் கடித்து 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி!

 
goats

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் கோட்டைபாளையத்தார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் புகழேஸ்வரன் (53). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மர்ம விலங்கு கடித்ததில் பட்டியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 20-க்கும் மேற்ப்பட்ட ஆடுகள் காயம் அடைந்தன.

goats

நேற்று காலை ஆடுகள் இறந்து கிடப்பதை கண்ட புகழேஸ்வரன் அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் பட்டணம் பேரூராட்சி சுகாதாரத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த நாய்கள் ஆடுகளை கடித்துக்கொன்றது தெரியவந்தது. இதனை அடுத்து, சுகாதாரத்துறையினர் உத்தரவின் பேரில் ஆடுகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன. மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.